போளூர், ஏப். 28- திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அங்காள பரமேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (40). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வினோத்குமார் (17) 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். தம்பி தினகரன் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் வழக்கம் போல் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீரென்று வீட்டின் மேற்கூரை இடிந்து வினோத்குமார், தினகரன் மீது விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தினகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். வினோத்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.