districts

img

கிரிவலப்பாதையில் கழிவறைகளை திறக்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஜன. 3- திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆணாய் பிறந்தான், அத்தியந்தல் அடிஅண்ணா மலை, வேங்கிக்கால் ஆகிய ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதால் கிரிவலம் வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மார்கழி மாதத்தில் தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டுள்ளனர். உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மலையை சுற்றி 14 கிலொமீட்டர் தூரம் கிரிவலப் பாதையில் 4 ஊராட்சிகளிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் அனைத்தும் பூட்டி கிடப்பதால் பெண்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பூட்டிக் கிடக்கும் கழிப்பறைகளை தினசரி திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.