திருவண்ணாமலை,ஏப்.9- வந்தவாசி அடுத்த மாலையிட்டாங் குப்பம் பகுதியில், இஸ்லாமிய மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்ச ரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, காரம் ஊராட்சி, மதுரா மாலையிட்டான் குப்பம் கிராமத்தில், பாய் நெசவு, கோரை சாயம் போடுதல் மற்றும் கூலி வேலைகளில் ஈடுபட்டு, இஸ்லாமிய குடும்பத்தினர் பலர், பல ஆண்டு காலமாக வசித்து வந்தனர். வசிக்க வீடு இல்லாமல் தவித்த இஸ்லாமிய கூலி தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு, ஊருக்கு வெளியே, தீர்வு ஏற்படுத்தாத தரிசு நிலத்தில் வீடு கட்டி குடியிருக்க ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் போடப்பட்டது.அதன் அடிப்படையில் அந்த இடத்தில் கடந்த 2022 பிப் 2 ஆம் தேதி வந்தவாசி சட்ட மன்ற உறுப்பினர் அம்பேத்குமார் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயரில் நகரை ஏற்படுத்தி, அங்கு வசிப்பவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதில் சுமார் 35 முஸ்லிம் குடும்பத்தினர் குடிசை வீடு கட்டி, வீட்டுவரி செலுத்தி, ஆதார் அட்டை, ரேசன் அட்டைகள் பெற்று குடி யிருந்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய மக்கள் குடிசை கட்டி வசித்துவருவது ஆக்கிரமிப்பு பகுதி எனவும், குடிசைகளை காலி செய்ய வேண்டும் என, வந்தவாசி வட்டாட்சி யர் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, தங்கள் வசிப்பிடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என, ஞாயி றன்று (ஏப்.9) பொதுப்பணித்துறை எ.வ. வேலுவிடம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் தெரிவித்துள்ளதாவது,காரம் மதுரா மாலையிட்டான் குப்பத்தில் வசிக்கும் முஸ்லீம் இன சிறுபான்மை மக்கள் 5 ஆண்டுகாலமாக தீர்வை ஏற்படாத தரிசு சர்வே எண்.171/1ஹ1ஹ, நிலத்தில் குடிசை வீடுகட்டி வாழ்ந்து வரு கின்றனர். அவர்களுக்கு சொந்தமாக வீட்டு மனையோ, வேறு எந்த சொத்துக்களோ இல்லாத நிலையில் இருக்கின்றனர். அவர்களில் 19 நபர்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலமாக வீடுகள் ஒதுக்கப்பட்டது. பட்டா இல்லாத ஒரே காரணத்தால் அவர்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்க ஒன்றிய நிர்வாகம் மறுக்கிறது. அந்த மக்களுக்கு உடனடியாக வீட்டு மனைப் பட்டா கிடைத்தால், அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் எ.அப்துல் காதர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன் உள்ளிட்டோர் மனு கொடுக்கும் இயக்கத்தில் பங்கேற்ற னர்.