திருவண்ணாமலை, ஜூன் 3- திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா, உரம் விற்பனை செய்ததில் நடைபெற்ற ஊழல், முறைகேட்டை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மே மாதம் 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்களாக இரவு, பகலாக நடந்து வந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளின் உணவு தேவைக்காக, அரிசி, பருப்பு, புளி, காய்கறி, கிழங்கு வகைகள் ஆகியவற்றை செலங்குப்பம், கெங்க னந்தல் ஆகிய கிராமங்களிலிருந்து கிராம மக்கள், சீர்வரிசையாக வேலூர் சாலையிலிருந்து ஊர்வலமாக போராட்டக்களத்திற்கு வந்து கொண்டு வந்து கொடுத்தனர். இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பலராமன், மாவட்டச் செயலாளர் டி.கே.வெங்கடேசன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ், நிர்வாகிகள் பன்னீர், பழனி, அசோகன், ராஜகோபால், சம்பத், கலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 3) வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பாலா, காவல் துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, உர விற்பனை குறித்து 20 நாட்களில் வேளாண் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என கடிதம் கொடுத்தனர். இதனையடுத்து, காத்திருக்கும் போராட்டத்தை விலக்கிக் கொள்ளப்பட்டது.