districts

img

இஸ்லாமிய கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா கிடைக்குமா?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் ஊருக்குள் குடியிருக்க இடமில்லாமல், ஊருக்கு வெளியே, மலைக் குன்றுகளுக்கு நடுவே, தரிசு புறம்போக்கு நிலத்தில் குடிசை கட்டி வசிக்கும் இஸ்லாமிய கூலித் தொழிலாளர் குடும்பத்தினர் குடிமனைப் பட்டா, குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். வந்தவாசி தாலுகா காரம் ஊராட்சி மன்றத்திற்குட்டபட்டது மதுரா மாலையிட்டான் குப்பம். இந்த கிராமத்தில், பாய் நெசவு, கோரை சாயம்போடுதல் மற்றும் கூலி வேலைகளில் இஸ்லாமிய குடும்பத்தினர் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டுக் குடும்பத்தில் இருந்து, திருமணமாகி புதிதாக உருவான குடும்பத்தில் பலரும் வசிக்க இடமில்லாமல் நீண்ட காலமாக தவித்து வந்தனர்.  இந்நிலையில், வசிக்க வீடு இல்லாமல் தவித்து வரும் இஸ்லாமிய கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு ஊருக்கு வெளியே, தீர்வு ஏற்படுத்தாத தரிசு நிலத்தில் வீடு கட்டி  குடியிருக்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் அந்த இடத்திற்கு “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” நகர் என்று பெயரிட்டனர். இங்கு சுமார் 35 முஸ்லிம் குடும்பத்தினர் குடிசை வீடு கட்டி குடியேறினர். அந்த வீடுகளுக்கு வீட்டுவரி செலுத்தியுள்ளனர். ஆதார் அட்டை, ரேசன் அட்டையும் வாங்கியுள்ளனர். ஆனாலும், வீட்டு மனைப்பட்டா கிடைக்கவில்லை. இதனால் அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை.

தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலை வர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், வந்தவாசி  வட்டார செயலாளர் அப்துல்காதர், சிறுபான்மை மக்கள் குழு நிர்வாகி யாசர் அராபத் ஆகியோர் தலைமையில் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், சிறுபான்மையினர் நல ஆணைய அதிகாரிகள் அமைச்சர்களிடமும் கோரிக்கை மனு அளித்தனர். ஆனாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.   இதற்கிடையில் வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், திமுக மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் முன் முயற்சியால் அடிப்படை வசதிகள்  சிலவற்றை செய்து கொடுக்கப்பட்டது. ஆனாலும்,  அரசு அதிகாரிகளின் அலட்சியம் காட்டிவரு கின்றனர். எங்களின் வாழ்விடத்தையும் சுயமரியாதை யையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என கூலித் தொழிலாளர் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். - செந்தாமரைக் கண்ணன்