திருவண்ணாமலை, டிச. 2- திருவண்ணாமலை ஒன்றியம், பெரு மணம் கிராமம் வேளாங்கண்ணி தெருவில் அருந்ததிய மக்கள் 5 தலைமுறைகளாக வசிக்கின்றனர். தற்போது 50 குடும்பங்கள் உள்ளது. ஆனால், 25 வீடுகள் மட்டுமே இருக்கிறது. ஒரே வீட்டில் நான்கு, ஐந்து குடும்பங்களாக வசிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டுமனைகள் வழங்கக் கோரி 2019 ஆண்டில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வருவாய்த் துறையினர் அந்தப் பகுதிக்கு சென்று நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியானன்று (டிச. 1) மனு அளித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எஸ்.ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.