districts

img

திருப்பூரில் கே.தங்கவேல் நினைவு நூலகம் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்

திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் தோழர் கே.தங்கவேல் நினைவு நூலகத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

ஞாயிறன்று திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவின் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் தோழர் கே.தங்கவேல் நினைவு நூலகத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தீக்கதிர் மாவட்ட செய்திப்பிரிவு

இதைத் தொடர்ந்து இதே அலுவலகத்தில் தீக்கதிர் நாளிதழின் திருப்பூர் மாவட்ட செய்திப் பிரிவு அலுவலகத்தையும் அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் கணினியை இயக்கி செய்திப் பிரிவு செயல்பாட்டைத் தொடக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன்  தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மைதிலி வரவேற்றார். இதில் அண்மையில் காலமான கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் உருவப்படத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் திறந்து வைத்தார்.

இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் “வேலை கொடு” முழக்கத்துடன் 3000 கிலோமீட்டர் சைக்கிள் பிரச்சார பயணம் நடத்தியதில் பங்கேற்ற திருப்பூர் தோழர்களுக்கு பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, எம்.கண்ணன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் உள்ளிட்டோர் கேடயம் வழங்கி வாலிபர் சங்கத்தினரைப் பாராட்டினர். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டனுக்கு பாராட்டி கேடயம் அளித்தார்.

இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.20 ஆயிரத்தை கே.பாலகிருஷ்ணனிடம், திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் வழங்கினார்.

கட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, தீக்கதிர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் வே.தூயவன் நன்றி கூறினார்.

;