districts

img

ஆசிரியர் இடமாற்றம்: மாணவர்கள் போராட்டம்

திருப்பத்தூர், நவ. 14- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தும்பேரி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 677 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலவன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கருதி இயற்பியல் ஆசிரியர் வேலவனை மீண்டும் பள்ளியில் பணி அமர்த்தக் கோரி 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சம்பத், அம்பலூர் காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் இயற்பியல் ஆசிரியர் வேலவன் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின்னர் மாணவர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்று போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்குள் சென்றனர்.