திருநெல்வேலியை சேர்ந்த மூத்த எழுத்தாளர் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப், செவ்வாயன்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
1948 முதல் 1951 வரை இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டக் காலம். ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறையில் நடந்த அரச தாக்குதலில் பலர் கொலை செய்யப்பட்டனர். தலைமறைவான கம்யூனிஸ்ட்களைப் போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தியது.
நெல்லையில் ரயிலைக் கவிழ்க்க சதி செய்ததாக கம்யூனிஸ்ட்கள் 70 பேர் மீது நெல்லை சதி வழக்கு போடப்பட்டது.
அதில், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், 6 பேருக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனையும், ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் தண்டனையும், 51 பேருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனையும், ஒருவருக்கு ஒரு ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.
சதி வழக்கில் கைதான நபர்களில் ஆர்.எஸ்.ஜேக்கப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சதி வழக்கில் இவருடன் சிறைவாசம் இருந்தவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவும் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு கதைகள் எழுதியவரும் மற்றும் போராடியவருமான ஆர்.எஸ்.ஜேக்கப், ‘ வாத்தியார்’ என்ற நாவல் மூலம் பிரபலமானார்.அதனாலேயே இவரை ‘வாத்தியார் ஜேக்கப் என்று மக்கள் அழைத்தனர்.
இந்நிலையில், பாளையங்கோட்டை சாந்திநகரில் வசித்த வந்த எழுத்தாளர் ஆர்.எஸ்.ஜேக்கப் (97). உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாயன்று காலமானார்.இன்று புதனன்று மாலை 4 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிமரியாதை நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.