districts

img

கலவரம் செய்தால்தான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்' என பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் கைது!

தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளர முடியும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி உடையார் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, அவர் நெல்லை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்து மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் உடையார் என்பவர் நெல்லை பாஜக மாவட்டத் தலைவர் தமிழ்ச் செல்வன் என்பவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அதில், தமிழகத்தில் பாஜக எங்குமே ஜெயிக்கவில்லையே என இருவரும் கவலைத் தெரிவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நெல்லையில் நயினார் நாகேந்திரன் பணத்தையெல்லாம் கட்சியினரை நம்பி கொடுக்காமல் அவருடைய உறவினர்களை நம்பி கொடுத்துவிட்டார்.

ஆனால், அவர்கள் யாருமே வாக்களர்களுக்கு பணத்தை விநியோகிக்கவில்லை,மேலும் கட்சியில் உள்ளடி வேலைகளை யாரோ பார்த்திருக்கிறார்கள். இதனால்தான் நெல்லையில் பாஜக தோற்றது என கூறியபடியே உடையார், தமிழகத்தில் பாஜகவால் ஓட்டை வாங்க முடியுமா? எவனையாவது அடிக்க தெம்பு திராணி இருக்கிறதா? கலவரம் செய்தால்தான் பாஜக தமிழகத்தில் கால ஊன்ற முடியும் என பேசியிருந்தார்.இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பலரும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, இந்து மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் உடையார் மீது மத ரீதியாக கலவரத்தை தூண்டுதல், பொது அமைதியை குலைப்பது, அவதூறு பரப்புதல் என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக போன்ற இந்துத்துவ அமைப்பினர் தங்கள் கட்சி மற்றும் அமைப்புகளை வளர்க்க பெரிதும் நம்புவது கலவரத்தை தான். மக்களிடையே மத ரீதியான வெறுப்பு பேச்சுக்களை பேசி, அதன் மூலம் கலவரத்தை உண்டாக்கி, அரசியல் ரீதியாக லாபம் அடைவது தான் இந்துத்துவ அமைப்பினரின் யுக்தியாக உள்ளது. அந்த வகையில் வடமாநிலங்கள் போன்று தமிழகத்திலும் மதகலவரத்தை உண்டாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் என்பது இவர்களின் உரையாடல் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது.ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் இதுபோன்ற அமைப்புகளை தொடர்ந்து கண்காணித்து, எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.