districts

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும்

திருநெல்வேலி, ஆக. 1 - அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே. சாமுவேல் ராஜ் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டில் வாழ்கின்ற அருந்ததியர் மக்களின் உள் இடஒதுக்கீடு தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து, உள் இடஒதுக்கீடு செல்லும் என்கிற தீர்ப்பை இன்று வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் - இந்தியாவின் சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் ஒரு ‘மைல் கல்’ தீர்ப்பு என்று இத்தீர்ப்பினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது.

2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி துவங்கி 2009-ஆம் ஆண்டு வரை, இரண்டாண்டு காலம், தமிழ்நாட்டினுடைய அத்துணை நகரங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பிலும் அருந்ததியர் மக்களின் உள் இடஒதுக்கீட்டிற்கான தொடர்ச்சியான போராட்டங்களை நாங்கள் நடத்தி வந்தோம். அதன் காரணமாக அன்றைய தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி ஜார்த்தனன் அவர்களின் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, அந்த ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள், அருந்ததியர்க்கான இந்த உள் இடஒதுக்கீடு என்ற ஒரு வாய்ப்பினை வழங்கினார். தொடர்ச்சியாக தமிழகத்திலே இதற்கான போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் - இடதுசாரிகள் நாங்கள் முன்னெடுத்தோம். 

அதன் பிறகு சிலர், இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். இந்த உள் இடஒதுக்கீடு, அரசியல் சாசனத்தின்படி செல்லத்தக்கதா? என்ற அப்போது கேள்வி எழுப்பப்பட்டது. அந்த வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என். வரதராஜன், ஜி. ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத் ஆகியோர் இம்ப்ளீட் பெட்டிஷன் (Implied Petition) தாக்கல் செய்து, அந்த வழக்கை நடத்தி வந்தனர். இன்றைக்கு அந்த வழக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டு- தமிழ்நாட்டு அருந்ததியர் மக்களுடைய உள் இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டு உள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இதுபோன்று இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சிதரக் கூடிய தீர்ப்பாக அமைந்துள்ளது.”

இவ்வாறு கே. சாமுவேல் ராஜ் குறிப்பிட்டுள் ளார்.