சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு ஆதரவளித்து பாதுகாத்த காரணத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகம் மீது சாதி ஆதிக்க வெறியர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து திங்களன்று மாலை கட்சியின் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், பி.கற்பகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சடையப்பன், மதிமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், விடுதலை சிறுத்தை கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, திராவிட தமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், தமிழர் உரிமை மீட்புக் களம் கணேசன், சிபிஐ (எம் எல்) மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.