புதுக்கோட்டை, டிச.14 - குளந்திரான்பட்டில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 551 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம், குளந்திரான்பட்டு கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பில், 551 பயனாளிகளுக்கு ரூ.1,04,90,699 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார். அரியலூர் அரியலூரை அடுத்த மஞ்சமேடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 126 பயனாளிகளுக்கு ரூ.18.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். பின்னர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். முகாமுக்கு அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.