districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருவாரூர் வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.9-  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய கௌரிசங்கரை திடீரென வலங்கைமான் ஒன்றியத்திற்கு பணி மாற்றம் செய்த திருவாரூர் வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்டக்கிளை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் புருஷோத்தமன், வட்டப்பொரு ளாளர் விசுபாலன், துணை தலைவர் மணிகண்டன், துணை செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: மேலும் ஒருவர் பலி

அரியலூர், பிப்.9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூருக்கு ஜனவரி 30 அன்று 50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, செந்துறை அடுத்த ராயம்புரம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த செந்துறை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் கார்த்திகேயன்(20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதில், பலத்த காயமடைந்த சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (33) தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புத னன்று அவர் உயிரிழந்தார்.

5,750 கிலோ  ரேசன் அரிசி பறிமுதல் 

தஞ்சாவூர், பிப்.9-  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள வீட்டில் பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிக்கப்படும் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாக உணவு பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தொடர்புடைய வீட்டில் புதன்கிழமை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் 50 கிலோ எடை கொண்ட 97 மூட்டைகளில் பச்சரிசி 4,850 கிலோவும், புழுங்கல் அரிசி 900 கிலோவும் என மொத்தம் 5,750 கிலோ அரிசி இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  இது தொடர்பாக அய்யம்பேட்டை அருகே உள்ள சூலமங்கலம் அன்னை நகரைச் சேர்ந்த செல்வகுமார் (61), பாலூர் முதன்மை சாலையைச் சேர்ந்த சுதர்சன் (35) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து இரண்டு  பைக்குக ளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

பிப்.11 பெரம்பலூரில்  பொது விநியோக குறைதீர் முகாம் 

பெரம்பலூர், பிப்.9- பெரம்பலூர் வட்ட கிராமங்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்ககைளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கான சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் பிப்ரவரி 11 அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  க.கற்பகம் தெரிவித்துள்ளார்.   பெரம்பலூர் வட்டம் பொம்மனப்பாடி கிராமத்தில் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் தலைமை யிலும், வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலர் தலைமையிலும்,  குன்னம் வட்டம் பேரளி (வ)  கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு  அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் அணைப் பாடி கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமை யிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.  எனவே, பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, உண வுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்த மான குறைகளைத் தெரிவித்து பயனடையலாம்.

சிபிஎம் போராட்ட  அறிவிப்பால் நடவடிக்கை நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் உறுதி

மன்னார்குடி, பிப்.9- திருவாரூர் மாவட்டம் பழைய நீடாமங்கலம் புது பாலத்தின் கட்டுமான பலத்தை கருத்தில் கொண்டு அதன் வழியாக கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்திட வேண்டும், நீடாமங்கலம் பெரியார் சிலை வரையில் சாலையை அகலப்படுத்தி தார்சாலை அமைத்திட வேண் டும், வையகளத்தூர் மேம்பாலத்தில் இருந்து புதுப்பாலம் வரையில் சாலையை செப்பனிட வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியக் குழு தொடர்ந்து இயக்கங்களை நடத்தி வந்தது.  இதன் தொடர்ச்சியாக பிப்வரி 8 அன்று மக்களை திரட்டி பெரியார் சிலை எதிரில் சாலை மறியவில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், பிப்ரவரி 7 அன்று நீடாமங்கலம் வருவாய் வட்டாட்சியர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி,  மாவட்டக் குழு உறுப்பினர் ரெ.சுமதி, ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி, நகரச் செயலாளர்  தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையில், பாலத்தில் இருந்து பெரியார் சிலை  வரையில் உள்ள சாலையை ஆய்வு செய்து அகலப்படுத்து வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து பெரியார் சிலை அரு கிலும் புதுப்பாலம் அருகிலும்  அறிவிப்பு பலகைகள் வைக்கப் படும், புது பாலத்திலிருந்து வையகளத்தூர் மேம்பாலத்தை இணைக்கும் சாலையை தார்சாலையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்த னர்.  இதனையடுத்து சிபிஎம் சார்பில் நடைபெறவிருந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. 

இன்று தோழர் என்.கோவிந்தராஜன் நினைவகம் திறப்பு

திருவாரூர் ஒன்றியம் புலிவலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு சார்பில் தோழர் என்.கோவிந்தராஜன் நினைவகம் திறப்பு விழா நடைபெற உள்ளது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைக்கிறார்.  மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கொடி யினை ஏற்றி வைக்கிறார். மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி கல்வெட்டினை திறந்து வைக்கிறார். பெயர் பலகையினை பி.கோமதி திறந்து வைக்கிறார்.  அதைத்தொடர்ந்து மாலையில் புலிவலம் கடை தெருவில் நடைபெறுகிற கட்சி நிதி அளிப்பு கூட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 150 பேர், மார்க்சிஸ்ட் கட்சியில் இணைகிறார்கள். பொதுக் கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றுகிறார்.