மயிலாடுதுறை, டிச.24- மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தும், வீரவெண்மணி வரலாறும்-கம்யூனிஸ்ட்டுகளின் தியாகமும் என்ற முழக்கத்தோடு நடைபெற்ற 250 கிலோமீட்டர் நடைபயணம் 7-ஆவது நாளான வெள்ளியன்று இரவு இலுப்பூர் சங்கரன்பந்தலில் நிறைவடைந்தது. திருவிடைக்கழி, தில்லையாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி, சாத்தனூர், பூதனூர் வழியாக வந்த இந்த நடைபயணம் இலுப்பூர், சங்கரன்பந்தல் கடைவீதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆசிக் ரஹ்மான், கிளை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உரையாற்றினர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.