தஞ்சாவூர், செப்.3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், இடையாத்தி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில், கலைஞரின் வரு முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அருள் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் அன்புக்கரசி செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமை தொடங்கி வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் பேசினார். மருத்துவக் குழுவினர் 1,547 பொதுமக்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம், சிறுநீர், உப்பு, இசிஜி, கண்புரை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து ஆலோசனை வழங்கினர். மேலும், மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.