districts

img

பூம்புகார் - கல்லணை சாலை தடுப்பை நீக்க வலியுறுத்தல்

கும்பகோணம், செப்.10 - கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பூம்புகார்-கல்லணை சாலை தடுப்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பூம்புகார் -கல்லணை சாலை வரலாற்று சிறப்புமிக்கதாகும். இங்கு, சுவாமிமலை செல்லும் வழியில்  புளியஞ்சேரி பகுதியின் குறுக்கே, தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், சுவாமிமலைக்குச் செல்லும் பக்தர்கள் சுமார் 2 கி.மீட்டர் சுற்றிச் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாகவும், இரவு நேரங்களில் இருள்சூழ்ந்த பகுதியாகவும் உள்ளது. சுவாமிமலை குறுக்கே கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை தடுப்பை நீக்கி, நேர்வழியை ஏற்படுத்த வேண்டுமென, அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், பூம்புகார் - கல்லணை (புளியஞ்சேரி) சாலை தடுப்பு நீக்கும் குழு அமைத்து போராடியும் வந்தனர். ஆனால் நெடுஞ்சாலைத் துறையோ 10 அடி அகலம் உள்ள மிகவும் குறுகிய பாதையை திறப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறது. இது, அவசரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களோ, ஆம்புலன்ஸ்களோ செல்ல முடியாத பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. எனவே, பூம்புகார் - கல்லணை சாலை (புளியஞ்சேரி) தடுப்பை நீக்கி, அகலமான பாதையாக அமைத்து திறந்துவிட வேண்டும்” என்றார்.  ஆய்வின் போது கல்லணை - பூம்புகார் சாலை தடுப்பு நீக்கும் குழு ஒருங்கிணைப்பாளர் கோதண்டபாணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் ராஜகோபாலன், சண்முகம், நாகராஜன், கணேசன் வழக்கறிஞர் ராமன், நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.