திருச்சிராப்பள்ளி, பிப்.18 - ஒன்றிய பாஜக அரசு பொதுத்துறை மற்றும் மக்களுக்கு விரோதமாக பல முடிவுகளை எடுத்து பொதுத் துறை நிறுவனங்களை விற்று வருகிறது. இந்த மக்கள் விரோத போக்கின் தொடர்ச்சியாக தற்போது எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு முடிவெடுத்துள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதை கண்டித்து திருச்சி பெல் சிஐடியு சங்கம் சார்பில் வியாழனன்று பெல் எச்ஆர்டிசி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெல் சிஐடியு சங்க பொதுச் செயலாளர் பிரபு தலைமை வகித்தார். எல்ஐசியின் முக்கியத்துவம் குறித்தும், அரசுக்கு எல்.ஐ.சி செய்த உதவிகள் குறித்தும் எல்ஐசி சங்க துணைத் தலைவர் ஸ்ரீதர் பேசினார். பெல் ஸ்தல பிரச்சினைகள் குறித்து சங்க அமைப்புச் செயலாளர் சந்திரசேகரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியுவினர், பெல் ஊழியர்கள் எல்ஐசி பங்கு விற்பனையை எதிர்த்து கண்டன முழக்கமிட்டனர். பொருளாளர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.