districts

உதகையில் படகு போட்டி சுற்றுலா பயணிகள் பங்கேற்பு

உதகை, மே 12-

    நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மே 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

   இந்நிலையில், கோடை விழாவின் ஒரு நிகழ்ச்சியாக உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்ட படகு போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  

   நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் படகு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் போட்டி, பெண்கள் இரட்டையர் போட்டி, தம்பதியினர் போட்டி, பத்திரிக்கையாளர்களுக்கான போட்டி, படகு இல்லத்தில் பணிபுரியும் ஊழியருக்கான போட்டி என தனித்தனியாக நடைபெற்றது.

  இதில் ஆண்களுக்கான இரட்டை யர் போட்டியில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நிஷாத், ஆசீப் முதலிடத்தையும், ஆத்தூரைச் சேர்ந்த தேவா, சுபாஷ் ஆகியோர்  இரண்டாம்இடமும், கோவையைச் சேர்ந்த திருமூர்த்தி, நிதீஷ் மூன்றாம் இடம் பிடித்தனர்.  

  பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் சென்னையை சேர்ந்த பரணி, ஐஸ்வர்யா ஆகியோர் முதலிடத்தையும், சென்னையைச் சேர்ந்த நர்மதா, பிரியா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். தம்பதியினருகளுக்கான போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த மிர்துன் ஜெய், புரவிதம்பதியினர் முதலிடத்தையும், ஒடிசாவை சேர்ந்த ஆட்நவாஸ், அல்பாகான் தம்பதியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர். உதகை படகு இல்ல ஊழியர்களுக்கான துடுப்பு படகு போட்டி அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கோப்பைகளை வழங்கினார்.