திருச்சிராப்பள்ளி, ஆக.14 - குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தேர்தலுக்கு பின்னர் சிறுபான்மையினர் மீது 15-க்கும் மேற்பட்ட தாக்குதல் நடந்துள்ளது. குஜராத்தில் ஒரு தர்கா கோவிலாக மாற்றப்பட்டது. அலிகரில் முஸ்லிம் இளைஞர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் செவ்வாய்க்கிழமை மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைத் தலைவர் அன்வர் உசேன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலச் செயலாளர் கல்யாண சுந்தரம், மாநில பொருளாளர் இஸ்மாயில், மாவட்டச் செயலாளர் சார்லஸ், மாவட்ட துணைத் தலைவர் சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ஆண்டனி சுரேஷ், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர்.