திருவாரூர், பிப்.7- திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல்லை விற்கும் நடைமுறை மாற்றி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்று வருகிறார்கள். இந்நிலையில் ஒன்றிய பிஜேபி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மூடி, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மூலம் நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும், என்சிசிஎஃப் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்கிறது. ஒன்றிய அரசின் இந்த தவறான கொள்கை முடிவால், விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல்லை குறைந்த விலைக்கு விற்கும் அவலநிலை ஏற்படுகிறது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் பருவகால ஊழியர்கள் அனைவரும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு ஒன்றிய அரசின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது. மேலும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லை தினம்தோறும் இயக்கம் செய்யாததால் கொள்முதல் செய்த மூட்டைகள் வெயிலில் இருப்பதால் எடை இழப்பு ஏற்பட்டு பருவ கால ஊழியர்கள் இயக்க இழப்பு தொகையை அதிக அளவு கட்ட வேண்டிய நிலை ஏற்படும். சென்ற வருடம் இயக்க இழப்பு தொகையை கட்டாத பருவ கால ஊழியர்கள் 150 க்கு மேல் இன்னமும் பணி வழங்கப்படாமல் வீட்டிலேயே இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு கழிவறை வசதி ஆகவே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து உடனடியாக குடோனுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பெண் பணியாளர்களுக்கு கழிவறை இல்லாமல் உள்ளது. இதனால், பெண் ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பெண் ஊழியர்களை பணியமர்த்தம் செய்யும் பொழுது நிரந்தர கட்டிடம் உள்ள பகுதிகளுக்கு நியமனம் செய்தால் பெண் ஊழியர்களுக்கு பெரும்உதவியாக இருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் ரயில்வே குட்செட்டில் 200 தொழிலாளர்கள் சுமைப்பணி தொழிலாளர்களாக வேலை பார்க்கிறார்கள். டிஎன்சிஎஸ்சி நிர்வாகம் ரயில்வே வேகன் போடாததால், பேரளம் குட்செட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள். இவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் உடனடியாக ரயில்வே வேகன் போட சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தனது அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளார்.