மதுராந்தகம், ஜூன் 16- திருச்சி மாவட்டம், காட்டூர் கோத்தாரி சர்க்கரை ஆலையில் இருந்து மதுபானங்களை தயாரிக்கக் கூடிய மூலப்பொருளை ஏற்றிக்கொண்டு 5 லாரிகள் திருபெரும் புதூர் அடுத்த படப்பையில் உள்ள தனியார் கம்பெனிக்கு வந்து கொண்டிருந்தது. அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது ஒரு லாரி மட்டும் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 20 ஆயிரம் லிட்டர் மதுபான மூலப்பொருள் கொட்டி ஆறாக ஓடி வீணானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் தப்பினார். தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் காவல்நிலையத்தினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.