மயிலாடுதுறை, பிப்.16- மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துத் தர வேண்டும், மாணவர்களின் பணத்தையும், கல்லூரி சீரமைப்பு பணிகளுக்காக வந்த நிதியையும் கையாடல் செய்ததோடு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் கல்லூரி முதல்வர் அறிவொளியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல்லூரி மாணவர்கள் 4 நாட்களாக கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி, இந்து சமய அறநிலை யத்துறை கூடுதல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி நிர்வாகத்தினர் கலந்துகொண்ட கூட்டம் புதனன்று நடை பெற்றது. அடிப்படை வசதிகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்றி தருவதாகவும், கல்லூரி முதல்வரை விரைவில் மாற்ற நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை பொறுப்பு முதல்வரை நியமிப்பதாகவும், கல்லூரிக்கான தன்னாட்சி அந்தஸ்து புதுப்பிக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்ட நகலை சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் வியாழனன்று போராட்டக் களத்திற்கே வந்து அளித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொண்டனர். மேலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தாமதித்தால் மீண்டும் போராட்டத்தை வலுவாக நடத்துவோம் என மாணவர்கள் கூறினர். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, தலைவர் மணிபாரதி மற்றும் சர்மா, நிதீஷ்குமார் மனோஜ், நவீன், சுவேதா, கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.