districts

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தமிழக ஆளுநருக்கும் பொருந்தும்

கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி புதுக்கோட்டை, டிச.2 - பஞ்சாப், கேரள மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு, தமிழக ஆளுநருக்கும் பொருந்தும் என்றார் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம். புதுக்கோட்டை அருகே திருக்கட்டளையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கக் கூடாது என்பதுதான், பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவாகும். கேரள மாநில வழக்கிலும் இதையேதான் உச்சநீதிமன்றம் கூறியது. தமிழக ஆளுநருக்கும் அது பொருந்தும். அந்தத் தீர்ப்பு புரியவில்லை என்றால், நல்ல மூத்த வழக்குரைஞர் யாரையாவது ஆளுநர் கேட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்.  நடைபெற்று முடிந்த 5 மாநிலத் தேர்தல்களை பொறுத்தவரை பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். தமிழ்நாட்டிலுள்ள திமுக தலைமையிலான அணியில் எந்தப் பிளவும் ஏற்படாது. 39 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி பெறும். 10 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்போது சிறுபான்மையினருக்கு ஆதரவாக அதிமுக பேசுவதை யாரும் நம்ப மாட்டார்கள். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது ஹமாஸ் இயக்கத்தினரை ஆதரிப்பது ஆகாது. அதேபோல, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவது என்பது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்று அர்த்தம் ஆகாது” என்றார்.