districts

img

மினி பேருந்தில் திடீரென அதிகளவு புகை சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்

தஞ்சாவூர், செப்.7-  தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு, சரவணன் என்ற தனியார் மினி பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. மேரீஸ் கார்னர் பகுதியில், மினி பேருந்து வந்து கொண்டிருந்த போது, திடீரென பேருந்தின் பின்பக்கத்தில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியது.  இதனை பார்த்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக, பேருந்தில் இருந்த பயணிகளை அவசர அவசரமாக கீழே இறக்கி விட்டு, அருகில் இருந்த உயர்மட்ட பாலத்திற்கு பேருந்தை ஓட்டிச்சென்று நிறுத்தினர்.   அப்போது, சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் அதிகளவில் புகை வெளியேறியது. பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஓட்டுநர், உடனடியாக இன்ஜினை ஆப் செய்தார்.  இன்ஜினை நிறுத்தியவுடன் புகை வெளியேறுவது நின்றது. அதன் பிறகே ஓட்டுநரும், நடத்துநரும் நிம்மதியடைந்தனர். தொடர்ந்து பேருந்தை இயக்கியிருந்தால், பேருந்து தீப்பிடித்து எரிந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.  ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.