districts

img

மொரோவிய ஸ்டார்களை அறிமுகப்படுத்திய தரங்கம்பாடி

கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டாலே வீடுகள் தோறும் வண்ண, வண்ண நட்சத்திரங்களை (ஸ்டார்கள்) கட்டி அதில் மின் விளக்குகளை ஒளிரவிட்டு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடுவது வழக்கம்.  தற்போது மதங்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் தங்களது வீடுகளில் ஸ்டார்களை கட்டி ரசித்து வருகின்றனர். நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் வார ஞாயிற்றுக் கிழமையில் வரும் ‘ஞாயிறு’ என்கிற பண்டிகைதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடக்கமாகும். அதிலிருந்து புத்தாண்டு தொடக்கம் முடிந்து வரும் முதல் ஞாயிறான மகிமை விளங்கின பண்டிகை என்ற பண்டிகையோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறைவடையும். விதவிதமான ஸ்டார்கள் உலகம் முழுக்க இருந்தாலும், மொரோவிய ஸ்டார்களுக்கு என தனி மவுசு உள்ளது.  ஜெர்மனி நாட்டிலுள்ள மொரோவியன்ஸ் என்கிற பகுதியில் உருவான ஸ்டார் என்பதாலும், அங்கு வசிப்பவர்கள் அறிமுகப்படுத்தியதாலும் அது ‘மொரோவியன் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறது. 260 ஆண்டுகளுக்கு முன்பே டேனிஷ்காரர்கள் (டென்மார்க்) கட்டுப்பாட்டில் இருந்த போது 1760-களில் தரங்கம்பாடியை தலைமையிடமாக கொண்டு, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கிறிஸ்தவத்தை பரப்பி வந்தனர்

ஜெர்மனி நாட்டின் மொரோவியன் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர்கள்.  இவர்கள் தரங்கம்பாடிக்கு மேற்கே 1.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சாத்தங்குடி கிராமத்திலுள்ள சாலமன் தோட்டம் என அழைக்கப்படுகிற இடத்தில் தங்கியிருந்து, அங்கு திராட்சை, சாத்துக்குடி போன்ற பழ வகைகளையும், காய்கறிகளையும் பயிரிட்டு வந்தது. மேலும், பல்வேறு கைவினைப் பொருட்களை செய்து கலைகளை கற்றுத் தேர்ந்தவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.  அவர்கள் அங்கு தங்கியிருந்த போதுதான், மொரோவியன் ஸ்டார்களை இந்தியாவில் முதன்முறையாக தயாரித்து அறிமுகப்படுத்தி தரங்கம்பாடி, பொறையார், தில்லையாடி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளுக்கும், தாங்கள் சென்ற ஒவ்வொரு பகுதிகளுக்கும் பரப்பியுள்ளனர். அது முதல் இந்த ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் காலங்களில் தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பாரம்பரிய ஆலயங்கள், கட்டிடங்களில் ஒளிர்ந்து வருகிறது. டேனிஷ் ஆட்சிக் காலம் முதல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும், கிறிஸ்தவர்கள் அதிகமாய் வசிக்கும் ஊர்களில் பாரம்பரிய மொரோவியன் ஸ்டார்களை தொங்க விட்டிருந்தாலும், அவை தரங்கம்பாடியில்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து அங்கு வசித்த ஜெர்மனி நாட்டினராலேயே இந்த ஸ்டார்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன என வரலாற்று ஆதாரங்களை காண்பித்து ஓய்வு பெற்ற பேராசிரியரும், எழுத்தாளருமான மரியலாசர் கூறுகிறார். கடந்த 1980-களில் ஆன்மீக மன்றத்தில் இயக்குநராக பணியாற்றி ஏராளமான ஏழை, எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவியளித்துள்ளார் மறைந்த பிஷப் ஜான்சனின் துணைவியாரான ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஈவா மரியா சீபெர்ட் ஜான்சன்.  இந்நிலையில் தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் தோட்ட வேலை செய்து வருகிற சமாதானம் பாக்யராஜ் என்பவர், ஈவா மரியா சீபெர்ட் ஜான்சன் வைத்திருந்த மொரோவிய ஸ்டாரை பார்த்தும், அவர் சொன்ன செய்முறை பயிற்சியின் மூலம் இந்த ஸ்டார் தயாரிப்பில் கற்றுத் தேர்ந்துள்ளார். 43 ஆண்டுகளாக தொய்வின்றி மொரோவியன் ஸ்டார்களை செய்து, விரும்பி கேட்பவர்களுக்கு குறைந்த விலையில் தருகிறார். அதிக நேரம் செலவிட்டு தயாரித்து வருவதாகவும் உதவிக்கு தனது மனைவி இருப்பதாகவும், அவரும் இந்த ஸ்டார்களை செய்ய கற்றுக் கொண்டுள்ளார் என  ஆர்வமுடன் கூறுகிறார் சமாதானம் பாக்யராஜ். மேலும், தன்னிடம் வரும் ஏராளமான இளைஞர்களுக்கு இக்கலையை கற்றுத் தருவதாக கூறுகிறார். பாரம்பரியமான மொரோவியன் நட்சத்திரங்களை செய்து வரும் சமாதானம் பாக்யராஜ் போன்றவர்களுக்கு கடனுதவி வழங்கி ஊக்குவித்தால், தரங்கம்பாடியின் பெருமை பேசும்  மொரோவியன் ஸ்டார்கள் விழாக் காலங்களில் வருமானம் ஈட்டும் தொழிலாக அமையும்.

- செ.ஜான்சன்