districts

தமிழக பட்ஜெட் வேளாண்மையை தொலை நோக்குடன் உயர்த்தும் நிதிநிலை அறிக்கை பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா வரவேற்பு

பாபநாசம், மார்ச் 20 - மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண்மை நிதி நிலை அறிக்கை, வேளாண்மைத் துறையை ஓர் முழுமையான பரிணாமத்துடன் அணுகி, அதன் ஒவ்வொரு அங்கங்களும் மேம்படும் வகையில் அமைந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வேளாண் மக்களின் நல்வாழ்வை நாடும் அரசு என்ற அடிப்படையில், சென்ற ஆண்டு சிறந்த முன்னெடுப்புகளை எடுத்ததன் விளைவாக 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனையாக 4 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் அளவில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 3 லட்சத்து 16 ஆயிரம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில், பல இடங்களில் உள்ள வாய்க்கால்களில் நீரை சீராகக் கொண்டு செல்வதற்கும், தேவையான நீர் கடைமடைப் பகுதியை அடைவதற்கும், இதனால் 2 லட்சம் ஏக்கர் பயன்பெறக் கூடிய அளவிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ வாய்க்கால்கள் 550 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரப்படும் என்ற அறிவிப்பு குறுவை சாகுபடியில் மீண்டும் தமிழகம் சாதனைப் படைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தென்னை வணிக வளாகத்தில், தென்னை மதிப்புக்கூட்டும் மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். முதலமைச்சரின் மானாவாரி நிலம் மேம்பாடு இயக்கம் மூலம் 7 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 3000 மானாவாரி நிலத்தொகுப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு, வறண்ட நிலங்களுடைய உழவர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பதாக அமையும். ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை வேளாண்மை பெரிதும் உதவுகிறது. இயற்கை வேளாண்மையில் ஆர்வமாக உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து 150 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் 7,500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது. இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குவதற்காக 200 இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது. 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், சிறுதானிய திருவிழா மாநில, மாவட்ட அளவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. சாகுபடி முதல் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது வரை சிறுதானிய உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிதி ஒதுக்கீடும் பாராட்டத்தக்கது. சிறுதானிய திருவிழாக்கள் தமிழக அரசால் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மின் இணைப்பு இல்லாத விவசாயிகளின் கிணற்றுப் பாசனத்திற்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு போற்றத்தக்கது. கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் 50 சதவிகித மானிய அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, இரவு நேரங்களில் வயல்வெளிகளில் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்கும் சீறிய திட்டமாகும். விளைபொருட்களில் எஞ்சிய பூச்சிக்கொல்லி அளவினை அறிந்து ஏற்றுமதி மேற்கொள்ள இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்றுமதி அளவை உயர்த்திட உதவும். உள்ளூர் பயிர்களையும், மாடுகளையும், ஆடுகளையும், கோழிகளையும் மீட்டெடுக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.