தமிழ் மரம் என அழைக்கப்படும் பனைமரம் தன்னிடம் உள்ள ஒவ்வொன்றையும் மனிதருக்கான மருந்தாகவே அளித்து வருகிறது. இயற்கை மனிதர்களுக்கு அளித்த கொடைகளில் பனைமரத்திற்கென தனிஇடம் உள்ளது. தனது வாழ்நாள் முழுக்க மனித வாழ்வுக்காக பயன்தந்துக் கொண்டே இருக்கும் பனையில் ஏராளமான மருத்துவக் குணம் நிறைந்து இருக்கிறது. பனைக்கிழங்கு, நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி, பனம்பழம் என சலிப்பில்லாமல் மனிதர்களுக்கு பயன்களை தந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பனை ஓலை, மட்டை, மரம் என பயன்படாத பகுதி என்றே ஒன்று கிடையாது. பனை நுங்கு கிராமப் புறங்களிலும், கிராமங்களையொட்டிய நகர்ப்புறங்களின் சாலையோரங்களில் கோடைக்காலங்கள் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே, பனைமரத்திலிருந்து காய்களை வெட்டி வந்து கூலித் தொழிலாளர்கள் நுங்கு விற்பனையை தொடங்கி விடுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிர்பானம், ஐஸ்கிரீம் என சிலர் வாங்கி சுவைத்தாலும். பனை நுங்குக்குக்கான தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. சமீப காலமாக சாலை விரிவாக்கம் மற்றும் பல்வேறு பணிகளுக்காகவும், தேவைகளுக்காகவும் பனைமரங்களை அழித்து வரும் நிலையில், இயற்கையாக இன்றும் மரபணு மாற்றப்படாத ரசாயன உரம் கொண்டு வளர்க்கப்படாத அரிதான மரமாக பனை மரம் உள்ளது.
இந்நிலையில் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, பொறையார், திருக்கடையூர், சங்கரன்பந்தல், கடலி உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் சாலையோரங்களில் பனை நுங்கு விற்பனை கடைகள் அதிகளவில் உருவாகி இருப்பது நுங்கு மீதான மக்களின் ஆர்வத்திற்கு, இயற்கையை நோக்கிய மக்களின் தேடல்தான் என்பது மகிழ்ச்சியூட்டுகிறது. பொறையார் அருகே காட்டுச்சேரி நெடுஞ்சாலையோரத்தில் பனை நுங்கு விற்பனை செய்யும் காட்டுச்சேரி கிராமம், பட்டவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் விசாரித்தபோது, மதியம் 12 மணிக்கெல்லாம் முழுவதுமாக விற்றுவிட்டது தம்பி. முன்னாடியே வந்திருக்கலாம்ல என அக்கறையாய் பேச தொடங்கியவரிடம் பேச்சுக் கொடுத்தோம். பனை நுங்கு குறித்து அவர் கூறியதிலிருந்து, 3 மாத குழந்தையிலிருந்து (கரைத்து கொடுக்கலாம்) கர்ப்பிணி பெண்கள் வரை அவசியம் பனை நுங்கு சாப்பிடணும். உடல் சூட்டை முற்றிலும் தணிச்சிடும். நுங்கின் மேற்புறம் உள்ள ஓடு போன்ற மிருதுவான பகுதியோடு சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. அந்தப்பகுதியை சாப்பிட்டால் பெண்களுக்கு ரொம்ப நல்லது. வயிற்றுவலி, வயிற்றுப் புண், கண் எரிச்சல் என எல்லாம் சரியா போய்டும்ங்க, குழந்தைகளுக்கு உடலில் வருகிற வேர்குருவின் மேல் நுங்கு நீரை பூசினால் குணமாயிடும். சளி, இருமல் இருந்தாலும்கூட நுங்கை சாப்பிடலாம் ஒன்றும் செய்யாது.
இன்னும் நெறய இருக்கு தம்பி என ஆர்வமாய் சொன்னார். 3 நுங்கு 10 ரூபாய்க்கு விற்பதாகவும், சிறியதாக இருந்தால் கூடுதலாக தருவதாகவும், காலையிலேயே வந்துவிடுவதால் அதிகமான மக்கள் வந்து வாங்கி செல்கின்றனர். நாள்தோறும் ரூ.400 லிருந்து 500 வரை கிடைக்கிறது. மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்பட்டு இயற்கையாய் கிடைப்பதை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும். கடைகளில் சொன்ன விலைக்கு காசு கொடுத்து வாங்குபவர்கள் 10 ரூபாய்க்கு 10 நுங்கை கேட்டு பேரம் பேசுகிறார்கள் தம்பி என சிரித்தவரிடம் நுங்கை எடுத்தப் பிறகு வெட்டப்படுகிற மட்டைகளை என்ன செய்வீர்கள் என கேட்டோம். அதற்கு அவர், அப்படியே சேர்த்து வைத்து விற்றுவிடுவோம். விளைநிலங்களில் போட்டால் மக்கி நல்ல உரமாகி மகசூல் அருமையாக இருக்கும்ல. அதனால முன்னாடியே வந்து விலைபேசி சென்று விடுவாங்க என கூறி முடித்தார். கோடைக்காலம் முடிவதற்குள்ளாக ஒரே ஒரு முறையாவது பனை நுங்கை வாங்கி சாப்பிடுங்கள். நமது உடல் நலத்தை பேணி காப்பது நல்லது. நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாக்கிற பனையை காப்பது மட்டுமல்ல நமது கடமை, பனையை அதிகளவிற்கு நடுவதும் நம் முன் நிற்கிற முக்கிய வேலைகளில் ஒன்று. நவீன காலம் என்பதற்காக இயற்கையை மறந்து ரசாயனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட உணவை உண்டு அதில் பழகிய நாம் இனியாவது இயற்கை உணவுக்கு மாறுவோம் உடலையும், மண்ணையும் பாதுகாப்போம். - செ.ஜான்சன்