districts

img

தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கு வரமுடியாமல் மாணவர்கள் தவிப்பு

சீர்காழி. டிச 02.  சீர்காழி அருகே புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை மழை நீர் சூழ்ந்து வடியாமல் உள்ளதால் மாணவர்கள் இரண்டு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை.    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலோர புதுப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இதில் புதுப்பட்டினம், பழையாறு, கொட்டாய்மேடு, மடவா மேடு, ஓலகொட்டாய்மேடு, தாண்டவன்குளம், புளியந்துறை, கூழையார் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த20 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்ணீர் பள்ளி கட்டிடத்தை சூழ்ந்து பள்ளி வளாகத்தையும் முழுவதும் சூழ்ந்தது. வருடம்தோறும் இந்த வகுப்பறை கட்டடங்களை தண்ணீர் சூழ்ந்து வடிவதற்கு வழியின்றி பல நாட்கள் தேங்கி நிற்கும். பின்னர் சாதாரணமாக வடிவதற்கு ஒரு மாத காலம் ஆகும்.ஆனால் தற்போது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வகுப்பறைக் கட்டடங்களை சுற்றிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செல்ல முடியாதபடி கடந்த 20 நாட்களுக்கு மேலாக இரண்டு அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் வருகை பதிவு முழுமையாக இல்லை. இதனால் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் மட்டுமே தண்ணீரில் நடந்து சிரமத்துடன் வகுப்புக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இப்பள்ளியின் வகுப்பறை கட்டடங்களை முழுமையாக தண்ணீர் சூழ்ந்து தேங்கியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.