districts

img

ஆசிரியர்கள் தாக்கியதால் மாணவன் தற்கொலை முயற்சி

மயிலாடுதுறை, நவ.7-  மயிலாடுதுறையில் ஆசிரியர்கள் தாக்கியதால் மனமுடைந்த மாணவர் விஷம் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  சோழம்பேட்டை காளியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த மணிமாறன் மகனான மனோஜ், மயிலாடுதுறையிலுள்ள தியாகி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வணிகவியல் படித்து வருகிறார். பள்ளிக்கு சரியாக வராததால் வகுப்பாசிரியர் தங்கப்பன் பிரம்பால் கடுமையாகத்தாக்கி, பெற்றோரை அழைத்துவருமாறு கூறியுள்ளார். வியாழனன்று பள்ளிக்கு வந்த மனோஜை, ஆசிரியர் தங்கப்பன், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீண்டும் பிரம்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.  இந்நிலையில், மனமுடைந்த மாணவர் மனோஜ் மதிய இடைவேளையின் போது கடைக்குச்சென்று எலி பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார். உடல் சோர்வாகி இருந்ததை அறிந்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் கூறியதைடுத்து 108 வாகனம் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தகவலறிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிபாரதி, மாவட்ட தலைவர் அமுல் காஸ்ட்ரோ மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சி.மேகநாதன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்கள், உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.  இச்சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மாணவர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக்குழு, மாணவர் தற்கொலை முயற்சிக்கு காரணமான ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.