districts

விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க குடியிருப்பு சங்க தலைவர் வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 31 - திருச்சி மொராய்ஸ் சிட்டி குடியிருப்பு நலச் சங்க தலைவர் ஜெயராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மொராய்ஸ் சிட்டி அமைந்துள்ளது. இங்கு 454 குடியிருப்புகள் உள்ளன. இதில் பல தரப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஓட்டுநர், ஹவுஸ் கீப்பிங் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்கின்றனர்.  கொரோனா காலங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகள் உள்பட பல சமூகப் பணிகளையும் குடியிருப்பு நலச்சங்கம் செய்து வருகிறது. இந்த குடியிருப்பு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் குடியிருப்பின் முகப்பு பகுதியில் புல்தரையுடன் கூடிய ரவுண்டானா மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ரவுண்டானா அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசால் அகற்றப்பட்டது. அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இந்த ரவுண்டானா அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலேயே மின் விளக்குகளுடன் ரவுண்டானா அமைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற எங்களுக்கு போதுமான கால அவகாசம் கொடுத்து இருந்தால், அதை நாங்களே அகற்றி இருப்போம். மேலும் இதுகுறித்து நீதிமன்ற தடையும் பெற்றுள்ளோம்.  எனவே குடியிருப்பு வாசிகளின் பாதுகாப்பு கருதியும், விபத்துகளை தவிர்க்கும் விதமாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் இப்பகுதியில் மீண்டும் ரவுண்டானா அமைக்க வேண்டும். இதற்கான செலவில் 50 சதவீதத்தை குடியிருப்பு நலச்சங்கம் வழங்க தயாராக உள்ளது என சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்” என்றார்.