districts

கல்வி உதவித் தொகை வழங்குவதில் ரூ.17.36 கோடி முறைகேடு

மதுரை, டிச.7-  தமிழகத்தில் 2011 முதல் 2014-ஆம் ஆண்டு வரை 65-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பட்டியலின சாதியினர்,  பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக் காக ஒதுக்கப்பட்ட ரூ.17.36 கோடி-யில் முறைகேடு நடந்த தாக புகார் எழுந்துள்ளது. புகார் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் (டிவிஏசி) உயர்கல்வித்துறை மற்றும் பல்வேறு கல்லூரிகளின் ‘அடையாளம் தெரியாத’ அதிகாரிகள் மீது சிறப்புப் புலனாய்வு பிரிவு  வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசு அதிகாரிகளும், கல்லூரி அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் உடந்தையாக நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக  தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. சிறப்புத் தணிக்கை அறிக்கையில் 37 விதமான வழிகளில் மோசடி நடந்ததாகவும், அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான உதவித்தொகையில் இருந்து ரூ. 4.34 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை முறைகேடாக பயன் படுத்தப்பட்டதால் அரசுக்கு ரூ.4.34 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 52 கல்லூரிகள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் ஏழு பேர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகள் 11 பேர் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஊழல் தடுப்பு இயக்குனரகம் முடிவுசெய்துள்ளது.  அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க தொடர்புடைய ஆவணங்கள், பதிவுகள் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்படும் என ஊழல் தடுப்புப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 409, 420 r/w 120 (Bõ) பிரிவுகளின் கீழ் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது;  இதற்கிடையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளர் எஸ்.பழனிசாமி, இந்த வழக்கின் விவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும்,  பின்னர் கருத்து தெரிவிப்பதாகவும் கூறினார். முறைகேட்டில் தொடர்புடையதாக சுட்டிக்காட்டப்படும் மாவட்டங்களும், கல்லூரிகளின் எண்ணிக்கையும்: கோயம்புத்தூர்-14, கடலூர்-10, பெரம்பலூர்-10, காஞ்சிபுரம்-9, திருவள்ளூர்-6, நாமக்கல்-4, தஞ்சாவூர்-4, சென்னை-3, ஈரோடு-3,  தர்மபுரி-2, வேலூர்-2. தவிர  திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, தேனி, திருநெல்வேலி தலா ஒன்று.