மயிலாடுதுறை, பிப்.1- உலகப்புகழ் பெற்ற தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையினை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க கருங்கற்கள் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், டேனிஷ் ஆட்சிக்காலத்தின் போது 1620 இல் டென்மார்க் கலைநுணுக்க கட்டடக் கலையுடன் வடக்கு திசை நோக்கி வடக்கு-மேற்காக கட்டப்பட்டு, தரங்கம்பாடி கடற்கரையில் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது டேனிஷ்கோட்டை. 14 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய வணிக நகராக விளங்கிய தரங்கம்பாடியை, தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் மன்னனிடம் சொற்ப ரூபாய் வாடகைக்கு வாங்கிய டேனிஷ்காரர்கள் தங்களது அதிகார மையமாக மாற்றினர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு தரங்கம்பாடியிலிருந்து நெல், உப்பு, பருத்தி ஆடைகள், வாசனை திரவியங்கள் என பல பொருட்களை கடல் மார்க்கமாக ஏற்றுமதி செய்தும், பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்தும், மிகப்பெரிய வணிக மையமாக நடத்தி வந்தனர். தாங்கள் ஆட்சி செய்த காலங்களில் டேனிஷ்கோட்டையை தங்களது அடையாள சின்னமாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். தரங்கம்பாடியில் உயர்ந்து நிற்கும் பழமையான தேவாலயங்கள், கவர்னர் மாளிகை, அலுவலக கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள் என ஒவ்வொரு கட்டடங்களையும் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு கட்டி அமைத்துள்ளனர். திரும்பும் திசையெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்து காணப்பட்டாலும் தரங்கம்பாடியின் அடையாளங்களில் ஓன்றாகவும், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா விரும்பிகளின் மனம் கவர்ந்ததாகவும் உள்ள டேனிஷ்கோட்டை கடலரிப்பில் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. கடலரிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஏற்கனவே இரு முறை கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் கடல் நீரில் சேதமடைந்த நிலையில், கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் தற்போது சேதமடைய தொடங்கியுள்ளது. எனவே, டேனிஷ்கோட்டையை பாதுகாக்கும் விதமாக, ஏற்கனவே தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் முதல் அமைக்கப்பட்டுள்ள கருங்கற்கள் தடுப்புச்சுவரை டேனிஷ்கோட்டையை தாண்டி நீட்டித்து அமைக்க வேண்டும் என தரங்கம்பாடியை சேர்ந்த சமூக ஆர்வலரும், பேரூராட்சி துணைத்தலைவருமான பொன்.இராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, தற்போது ரூ.3 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் டேனிஷ்கோட்டையை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய டேனிஷ் கலாச்சாரத்தையும், நட்புறவையும் பேணி பாதுகாப்பது போல டேனிஷ்கோட்டையும் எந்தவித பாதிப்புமின்றி கடலரிப்பிலிருந்து பாதுகாக்க தமிழ்நாடு அரசு, தொல்லியல்துறையும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கோட்டையை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் போதே கோட்டையை சுற்றி கருங்கற்கள் பாதுகாப்பு தடுப்பு சுவரை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.