பாபநாசம், பிப்.11- பாபநாசத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில், பள்ளியின் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் முன் பக்க காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இடிந்து விழுந்தது. தற்போது இதில் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 3 வருடம் கடந்த நிலையில், இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவருக்குப் பதில், புதிதாக சுவர் கட்டப்படவில்லை. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி நூற்றாண்டு கண்ட பள்ளியாகும். இந்தப் பள்ளி விளையாட்டு மைதானத்தின் முன் பக்க காம்பவுண்ட் சுவரின் இரண்டு பக்கமும், ஒரு பகுதி சுவர் இல்லாமல் உள்ளது. மைதானத்தில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கலாம். இதன் கதவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பட்டவர்த்தி சண்முகம், கல்யாண சுந்தரம், வாசன் மாநிலங்களவை எம்.பிக்களாக உள்ளனர். கடந்த முறை எம்.பி யாக இருந்த ராமலிங்கத்திற்கு அதிக வாக்குகளை அளித்த பாபநாசம் தொகுதிக்கென அவர் எதுவும் செய்யவில்லை. குறைந்த பட்சம் இந்தப் பள்ளியின் காம்பவுண்ட் சுவரையாவது கட்டித் தந்திருக்கலாம். மாணவர்களின் நலன் கருதி, தங்களது எம்.பி நிதியிலிருந்து காம்பவுண்ட் சுவரை தரமாக கட்டித் தருவதுடன், மைதானத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.