மயிலாடுதுறை, ஜூன் 30 -
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வியாழனன்று மாலை நடைபெற்றது.
மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆண்கள், பெண்கள் என ஆட்களை அழைத்துவர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொரு வாகனங்களிலும் போதுமான அளவு ஆட்கள் வராததால், நாற்காலிகளில் அமர ஆள் இல்லாமல் 4 மணிக்கு கூட்டம் என அறிவித்து இரவு 7.30 மணிக்கு பொதுக்கூட்டம் துவங்கியது.
பின்னர் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும்போதே மழையும் பெய்யத் தொடங்கியதால் இருந்த கூட்டமும் ஆங்காங்கே சிதறி ஓட ஆரம்பித்தது. ஆனால் அவரோ வெறும் நாற்காலிகளை பார்த்து கையசைத்து மழுப்பி நின்றார். பின்னர் வழக்கம்போலவே ஊழலின்றி இந்தியாவை மோடி ஆட்சி செய்வதாகவும், அமைச்சர் செந்தில்பாலாஜியை பற்றியும் மழையில் நனைந்தபடியே பேசியதைக்கூட பெரிதாய் கண்டுகொள்ளாமல் மழைக்கு ஒதுங்கவே கூட்டத்தினர் இடம் தேடி ஓடினர்.
மக்கள் கூட்டம் அலைமோதும்; நிற்கவே இடம் இருக்காது. என்றெல்லாம் பில்டப் விட்ட பாஜகவைச் சேர்ந்தவர்கள் மக்கள் வராததால் நாற்காலிகள் வெறுமனே கிடந்ததையும், அடுக்கடுக்காக நாற்காலிகள் காத்திருந்ததையும் பார்த்து முறைத்தபடியே நின்றனர்.