தஞ்சாவூர், ஜூலை 13- காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் ஆத்துப்பாலம் அருகே சனிக்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மாதவாரியாக உள்ள நீர் பங்கீட்டை உடனே கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். விவசாயிகளுக்கு தண்ணீரை திறந்து விடாததால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்துக்குரிய தண்ணீரை பெற வேண்டும். இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.கோவிந்தராஜ், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோவிந்தராஜ், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அன்பு, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன், ஏஐடியுசி நிர்வாகி துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.