கும்பகோணம், ஆக.4 -
பூம்புகார் -கல்லணை சாலையில் குறுக்கே உள்ள தடுப்பை அகற்றக் கோரி ஆகஸ்ட் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணை-பூம்புகார் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கும்பகோணம் - சுவாமிமலை மையப் பகுதியான புளியஞ்சேரியில், தஞ்சாவூர் - விக்கிரவாண்டி நெடுஞ்சாலையை அமைப்பதற்காக குறுக்கே சுமார் 15 அடி அளவிற்கு உயர்த்தி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சுற்றிச் செல்லும் அளவிற்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இந்நிலையில் பூம்புகார் - கல்லணை சாலை தடுப்பு நீக்கும் குழு சார்பில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் சாலை தடுப்பை அகற்றக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டது. ஆனால் அரசு அதிகாரிகள் இதில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பூம்புகார் - கல்லணை சாலை தடுப்பு நீக்கும் குழு சார்பில் சுவாமிமலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கோதண்டபாணி தலைமை வகித்தார். ஆகஸ்ட் 11 ஆம் தேதி பூம்புகார் - கல்லணை சாலை தடுப்பை நீக்க கோரி, புளியஞ்சேரியில் பெருந்திரள் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.