மயிலாடுதுறை, நவ.19 - கொத்தங்குடியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக நடந்துகூட செல்ல முடியாத நிலையில் இருக்கிறது. இதை சீரமைத்துத் தரக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் கொத்தங்குடி ஊராட்சி, பனங்குடி காலனி தெருவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை கிரா மத்தோடு இணைக்கும் வகையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை மிகவும் பழுதடைந்து கப்பி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப் படுகிறது. மழைக்காலங்களில் சேறும் சகதியு மாகி விடுவதால் பொதுமக்கள் கடும் அவதி யடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சாலையை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியும், சாலையை சீரமைத்து தரக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் செவ்வாயன்று அப்பகு தியைச் சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தி னர். கட்சியின் கிளைச் செயலாளர் அம்பு ரோஸ் தலைமையில் நடந்த போராட்டத்தில், குளம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.வெண்ணிலா, ஒன்றி யக்குழு உறுப்பினர் என்.சந்திரமோகன், ரகுபதி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.