நாகர்கோவில், ஆக. 4
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் உபாத்யாய கிரா மின் கவுசல்ய யோஜனா (கிராமப்பபுற திறன் பயிற்சி) போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் வினாக்கள், தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9. 30 மணி முதல் மாலை 6. 30 மணி வரை செயல்படும். தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசி அல்லது கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு திட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி பெற முடியும். குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சிகள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்குதல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம். எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் 155330 அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்று பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.