districts

img

தெருக்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை

தஞ்சாவூர், ஜன.1 - பட்டுக்கோட்டை நகரில், தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சுப்பையா எச்சரித்துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 19-வது வார்டு பண்ணவயல் ரோடு அமிர்தம் நகர் நுழைவாயிலில், தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்து, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.  இதேபோல் பட்டுக்கோட்டை நகரில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்தது. மேலும், கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்பட்டு, அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும் அபாயமும் ஏற்பட்டது. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிவான செய்தி வெளியாகியிருந்தது.  இந்நிலையில் நகராட்சி ஆணையர் உத்தரவுப்படி நகராட்சி சுகாதார அலுவலர் நெடுமாறன்,

சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் அமிர்தம் நகர் உள்ளிட்ட பட்டுக்கோட்டை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதையொட்டி சாலைகளில் இருபுறமும் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.  இந்நிலையில் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பட்டுக்கோட்டையை தூய்மையான நகராக பராமரிக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகளில் சேரும் குப்பைகளை தெருக்களில் கொட்டக்கூடாது. வீடுதோறும் குப்பை சேகரிக்க வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும். இதனை மீறி சாலைகளில் குப்பை கொட்டுவோர் மீது ரூ.500 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், காவல்துறை மூலம் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.