தஞ்சாவூர், அக்.29 - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூர் பேரூராட்சி வலையன் வயல் கிராமத்தில், ரூ.19 கோடியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 168 அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெருமகளூர் வலையன் வயலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), நா.அசோக்குமார் (பேராவூரணி) ஆகியோர் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட்டனர். பின்னர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கு.ஜெயஸ்ரீ, பேராவூரணி வட்டாட்சியர் இரா.தெய்வானை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திருச்சி கோட்ட உதவி நிர்வாக பொறியாளர் டி.ஆர்.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீடும் தலா ரூ.2.82 லட்சம் செலுத்தும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. குடியிருப்புக்கான தொகையை தவணையாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.