districts

img

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திறந்தவெளி கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 8-  உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களிலும், வேலைக்குச் சென்று திரும்பி வீடு வரையிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், பிஎஸ்என்எல், எல்ஐசி, வங்கி, கட்டுமானம், ஐசிடிஎஸ், எம்டிஎம், டிஆர்இயூ, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மெடிக்கல் சங்கம், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், சனிக்கிழமை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் செல்வி, மகளிர் துணைக்குழு அமைப்பாளர் அமுதவள்ளி, ஆசிரியர் அமைப்பு ஹேமா ஆகியோர் தலைமை தாங்கினர். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனைவர் பால்பாண்டி, மாவட்டச் செயலாளர் நவநீதன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அல்போன்ஸ், தையல் சங்க மாவட்டச் செயலாளர் பிரமிளா, டிஆர்இயு கோட்டச் செயலாளர் கரிகாலன் ஆகியோர் உரை ஆற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் பாரதி நன்றி கூறினார். இதில், அரசு ஊழியர் சங்க வட்ட, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துறை வாரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கடந்த 1 முதல் 7 ஆம் தேதி வரை மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெண்கள் பணிபுரியும் இடங்களில் துண்டு பிரசுரம் கொடுத்து, உழைக்கும் பெண்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.