districts

img

தமிழகத்தில் மட்டும்தான் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு

கும்பகோணம்,  செப்.3 - இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் விவசாயத்திற்காக தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது என சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு வரவேற்றார். மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மக்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், வேளாண்மை உழவர் துறையின் தேசிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் 120 பயனாளிகளுக்கு ரூ.32,556 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறையில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,31,532 மதிப்பிலான நடவு இயந்திரம், மகளிர் திட்ட துறையின் சார்பில் 32 சுய உதவிகளை சேர்ந்த 384 பயனாளிகளுக்கு ரூ. 3,00,145 ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள், தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் பெண் நலம் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை என மொத்தம் 838 பயனாளிகளுக்கு ரூ.84,49,088 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த உதவிகளை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு வழங்கினர்.  இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில், “தமிழக விவசாயத்தில் டெல்டா மாவட்டம் முக்கிய பகுதியாக செயல்படுகிறது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் விவசாயத்திற்காக இதுவரை தனி பட்ஜெட் போடவில்லை” என்றார்.