districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர், பிப்.29 -  சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதிய வருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட அணக்குடி தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் தங்கையன் (68). இவர் 2022 ஆம் ஆண்டில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாலியல் வல்லுறவு செய்தார். இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தங்கையனைக் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சுந்தர்ராஜ்,  தங்கை யனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமையன்று தீர்ப்பளித்தார்.

பரபரப்புக்காக  தீ வைப்புச் சம்பவம்: வைக்கோலுக்கு தீ வைத்தவர்களை நூதன முறையில் கைது செய்த போலீஸ்

கும்பகோணம், பிப்.29- கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நெய்குன்னம் பகுதி யில் கடந்த வாரம் வைக்கோல் கட்டுகளை சில நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றனர் இதுகுறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.  தீப்பற்றி எரிந்த வைக்கோல் கட்டுக்கு  அருகில் உள்ள சுவற்றில்   ‘தெடரும்’ என்று பிழையாக எழுதி  வைத்திருந்தனர். இதனையடுத்து திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் சிலரை பிடித்து, அவர்களை  எழுதுமாறு கூறினார்.  அதில் சுவரில் எழுதி இருந்ததைப் போன்று தெடரும் என எழுதிய ஜெய பிரகாஷ் என்பவரையும் மற்றொரு நபரான பிரகாஷ் என்பவரையும் கைது  செய்து விசாரித்தனர். விசாரணையில் விளம்பரத்திற்காக  ஊரில் அனைவரும் பரபரப்பாக பேச வேண்டும் என்று இச்சம்பவத்தை நடத்தியது தெரிய வந்தது.

இணையவழி வேலை எனக் கூறி, தனியார் பள்ளி  காசாளரிடம் ரூ. 29.49 லட்சம் மோசடி

இணையவழி வேலை எனக் கூறி, தனியார் பள்ளி  காசாளரிடம் ரூ. 29.49 லட்சம் மோசடி தஞ்சாவூர், பிப்.29 -  கும்பகோணத்தில் இணையவழியில் வேலை எனக் கூறி தனியார் பள்ளி காசாளரிடம் ரூ. 29.49 லட்சம் மோசடி செய்த நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கும்பகோணம் மாநகரைச் சேர்ந்த தனியார் பள்ளி காசாளரின் கைப்பேசியின் வாட்ஸ்ஆப் செயலிக்கு பகுதி நேர வேலை என்றும், குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி னால் அதிக லாபம் பெற முடியும் எனவும் தகவல் வந்தது. இதை நம்பிய காசாளர் தனது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பியதைத் தொடர்ந்து, அவருக்கு ஒரு லிங்க் வந்தது. அதை கிளிக் செய்தபோது டெலிகிராம் செயலிக்கு சென்றது. அதில் இருந்த போலியான நபர்கள் தாங்கள் இந்தப் பகுதி நேர வேலை மூலம் அதிக வருவாய் ஈட்டுவதாக ஆசை வார்த்தைகள் கூறினர்.  இதையடுத்து, வீடியோக்களுக்கு ரேட்டிங் ஸ்டார் கொடுத்தல், விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், புகைப்படம், வீடியோக்களை பகிர்தல் உள்ளிட்ட டாஸ்கு களை செய்து கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வந்தது. முதலில் ரூ. 100 அனுப்பிய இவருக்கு ரூ. 300 ம், ரூ. 5 ஆயிரம் அனுப்பியதற்கு ரூ. 9 ஆயிரமும் கிடைத்தது. ஆனால், இத்தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படா மல், தனியாக வாலட் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து, பல்வேறு தவணைகளாக ரூ. 29.49 லட்சத்தை இணையவழி மூலம் அனுப்பினார். ஆனால், அவருக்கு எந்தத் தொகையும் கிடைக்காததால், ஏமாற்றமடைந்தார். இது குறித்து காசாளர் தஞ்சாவூர் இணையதளக் குற்றக் காவல் பிரிவில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர்  வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.