மயிலாடுதுறை, ஜூன் 17-
தமிழிசை மூவருள் ஒருவரான தமிழிசைவேந்தர் அருணாசலக்கவிராயருக்கு அவர் பிறந்த ஊரான தில்லையாடியில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயல், இசை, நாடக மன்ற வெள்ளி விழாவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் உள்ள அருணாசலக்கவிராயர் இயல், இசை, நாடக மன்றத்தின் வெள்ளி விழா வியாழனன்று மாலை ஊராட்சி மன்றத் தலைவர் அ.ரெங்கராஜ், பொதுநலச் சங்க முன்னாள் தலைவர் சா.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மன்ற நிறுவனர் நா.வீராசாமி, செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.
ஊரட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும், பத்திரிகையாளருமான வீ.தமிழன்பன் வரவேற்றுப் பேசினார். மன்றத்தின் தலைவர் பாவலர் சு.ராசமாணிக்கம் தலைமை வகித்துப் பேசுகையில், “தமிழிசை மூவருள் ஒருவரான அருணாசலக்கவிராயர் தில்லையாடியில் பிறந்திருந்தாலும், சில ஆண்டு காலம் சீர்காழியில் வாழ்ந்ததால், சீர்காழி அருணாசலக்கவிராயர் என்றே அழைக்கப்பட்டு, அதுவே நிலை நிறுத்தப்பட்டது. அருணாசலக்கவிராயரின் புகழை, தமிழிசைப் பங்களிப்பை பரப்ப வேண்டும். அவர் தில்லையாடியில் பிறந்தவர் என்ற அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருவையாறில் ஆண்டுதோறும் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பெயரில் தியாகராஜர் ஆராதனை விழா நடத்தப்படுவது போல, தில்லையாடியில் இந்த அமைப்பால் ஆண்டுதோறும் தமிழிசை விழா நடத்தப்பட்டது. இவ்வூரில் அருணாசலக் கவிராயருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்துக்கு அருகில் அருணாசலக்கவிராயருக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பலரும் இக்கோரிக்கையை வலியுறுத்தினர்.
பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் மன்றத்தின் வெள்ளி விழா மலரை வெளியிட்டார். மயிலாடுதுறை எம்.பி., செ.ராமலிங்கம், முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர், தமிழறிஞர் வீதி.முத்துக்கணியன் மற்றும் தமிழ்ச்சான்றோர்கள் பெற்றுக் கொண்டனர்.
நாதஸ்வர கலைஞர் திருமெய்ஞானம் டி.என்.ராமநாதன், எழுத்தாளர் மாங்குடி கு.பாலசுந்தரி, காரைக்கால் சப்தஸ்வரம் முதியோர் இல்ல நிறுவனர் கே.கேசவசாமி ஆகியோருக்கு தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக மெய்யியல் துறை தலைவர் கோ.க.நல்லசிவம் அருணாசலக்கவிரயார் இயல், இசை, நாடக மன்ற விருதினை வழங்கி உரையாற்றினார்.
வரிச்சிக்குடி எம்.விஜயகுமார் குழுவினரின் பரதநாட்டியம், இஞ்சிக்குடி டி.ஆர்.அன்பழகன் குழுவினரின் நாதஸ்வர இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டன. முன்னதாக அருணாசலக் கவிராயர் சிலைக்கு எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.