மயிலாடுதுறை, ஜன.20- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் தியாகிகள் அஞ்சான்-நாகூரான் 41 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். பின்னர் திருக்கடையூர் சன்னதி வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் வரவேற்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ஆர்.சங்கர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், ‘‘41 ஆண்டுகளாக திருமெய்ஞானம் தியாகிகளான அஞ்சானையும், நாகூரானையும், ஞானசேகரனையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி மரியாதை செய்வதென்பது வெறும் சடங்கிற்காகவோ, சம்பிரதாயத்துக்காகவோ அல்ல; மாறாக ஒவ்வொரு நாளும் மக்களுக்கான உரிமைகளுக்காகவும், மக்களின் நலனை பாதுகாக்கவும் போராட்ட களத்தில் நிற்கும் நாங்கள் ‘‘நெஞ்சுரம்’’ பெறுவதற்காக தான்.
1982-ல் மக்கள் விரோத கொள்கைகளுக்கெதிராக இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தின் போது போராட்டத்தை ஒடுக்க புரட்சி தலைவர், மக்கள் திலகம் என்றெல்லாம் மக்களால் கொண்டாடப்பட்ட எம்ஜிஆரின் காவல்துறை தான் திருமெய்ஞானம் கிராமத்தை சேர்ந்த அஞ்சான், நாகூரானையும், ஞானசேகரனையும் சுட்டுக் கொன்றது. சுட்டுக்கொன்றால் பொதுவேலைநிறுத்த போராட்டங்கள் இனி நடைபெறாது என நினைத்தார்கள். ஆனால் இதுவரை 22 பொதுவேலைநிறுத்தப் போராட்டங்களை தொழிலாளி வர்க்கம் நடத்தியுள்ளது. 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடதுசாரிகளுக்கு 60 க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் வெற்றி பெற்றார்கள். கம்யூனிஸ்ட்டுகள் நினைத்திருந்தால் அமைச்சர் பதவிகளை பெற்றிருக்கலாம். ஆனால் ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கான நூறு நாள் வேலைத்திட்டத்தை தயார் செய்து மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் அரசு வேலை தரும் திட்டத்தை அமல்படுத்த வைத்தோம். எங்களிடம் டெல்டா மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகளை சேர்ந்த பலரும் நூறு நாள் வேலை வந்த பிறகு தான் விவசாய பணிகள் செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி தரப்படுவதாக கூறுகிறார்கள். இந்தியா முழுவதும் நியாயமான கூலி கிடைப்பதற்கு 100 நாள் வேலை ஒரு காரணமாக உள்ளது. கம்யூனிசம் என்பது வெற்று முழக்கமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை; கம்யூனிஸ்ட் தியாகிகள் விதையாக விதைக்கப்பட்டுள்ளனர். நூறு ஆண்டுகளல்ல; ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் திருமெய்ஞானம் தியாகிகளின் நினைவை போற்றி ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். கம்யூனிஸ்ட்கள் எப்போதும் மக்களுடனே இருப்பார்கள். பாரத மாதா, பாரத மாதா என கூறிக்கொண்டு பாரத மாதாவின் சொத்துக்களை அம்பானிக்கும், அதானிக்கும் விற்றுக்கொண்டிருக்கிறார் மோடி. இரயில்வே, எல்ஐசி என எல்லாவற்றையும் விற்றுவருகிறார். இராணுவத்தையே தனியாரிடம் விற்க போகின்றனர். மக்களை பாதுகாக்க களத்தில் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் தான் இந்நாட்டின் காவல்காரர்கள்’’ என்று கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் பேசுகையில், ‘‘திருமண்டங்குடியில் 52 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர். அங்கு இயங்கி வந்த ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பிய விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ.112 கோடி தராமல் சர்க்கரை ஆலை நிர்வாகம் முறைகேடாக விவசாயிகளின் பெயரில் பல கோடி ரூபாய் கடனைப் பெற்றுள்ளது. 2019-லேயே மூடப்பட்ட அந்நிறுவனம் விவசாயிகளை ஏமாற்றியது மட்டுமல்லாமல், விவசாயிகள் பெயரில் கடனையும் சட்டவிரோதமாக வாங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு தெரிந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த நெல் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றினால் தான் மக்களுக்கு திமுக அரசின் மீது நம்பிக்கை ஏற்படும்’’ என்றார்.
விவசாயிகள் சங்க வளர்ச்சி நிதி: சிஐடியு வழங்கியது
சிஐடியு மாநில துணை தலைவர் ஆர்.தெய்வராஜ், விவசாய சங்க வளர்ச்சிக்காக இந்திய தொழிற்சங்க மையத்தின் ஒவ்வொரு உறுப்பினர்கள் தலா 1 ரூபாய் என்ற வகையில் முதல் தவணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை விவசாய சங்க மாநில பொது செயலாளர் சாமி.நடராஜனிடம் வழங்கினார்.