tamilnadu

img

தலித் மக்கள் வாழ்வியலை விளக்கும் படம்தான் அசுரன்

பாராட்டு விழாவில் கே.சாமுவேல்ராஜ் பேச்சு 

புதுச்சேரி,நவ.10   தமிழகத்தின் அவல நிலையை வெளி உலகத்திற்கு காட்டியுள்ள படம் அசுரன் என்று அந்த திரைப்படக் குழுவினருக்கு நடத்தப்பட்ட  பாராட்டு விழாவில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.   தேசிய விருதுபெற்ற இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள அசுரன் திரைப்படக்குழுவிற்கு பாராட்டுவிழா புதுச்சேரி ராம்இன்டர் நேஷனல் கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.  பாராட்டுவிழாவிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி பிரதேச தலைவர் வே.கு.நிலவழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அசுரன் திரைப்படகுழுவை சேர்ந்த கவிஞர்கள் யுகபாரதி, ஏகாதசி ஆகியோருக்கு சால்வை அணிவித்து விருதுகள் வழங்கி பாராட்டினார்.

பின்னர் கே.சாமூவேல்ராஜ்  பேசுகையில், தலித் மக்கள் இன்றைக்கு தீபாவளி பண்டிகையை கூட கொண்டாட முடியாத நிலைதான் தமிழகத்தில் உள்ளது. இப்படிப்பட்ட காலத்தில் தான் அசுரன் திரைப்படம் வெளிவந்துள்ளது. தலித் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதற்கு மாற்றாக பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது என்ற  அன்றைய ஆங்கில ஆட்சியின் உண்மையை அசுரன் திரைப்படத்தில் இயக்குநர் சுட்டி காட்டியிருப்பார். இன்றைக்கு அந்த பஞ்சமி நிலம் குறித்து தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.அன்றைக்கு நிலப்பதிவேடுத்துறை ஆணையராக இருந்த கிரிஜா வைத்தியநாதனிடம் பஞ்சமி நிலம் குறித்து கணக்கு விவரம் கேட்டோம், ஆனால் அதுகுறித்து அரசிடம் எந்த ஆவனமும் இல்லை என்று கூறினார். தலித் மக்கள் வாழ்வியலை விளக்கும் படம்தான் அசுரன்  என்றார்.

கவிஞர் ஏகாதசி கவிஞர் ஏகாதசி பேசுகையில் தமிழகத்தில் உள்ள கிராமத்தின் வாசணையை அசுரன் திரைப்படம் மூலம் பதிவு செய்துள்ளோம்.இன்றைக்கு முக்கிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். சாதிய கட்டமைப்புகள் எப்படி வேருண்டு இருக்கிறது. சாதியை தூக்கி சுமக்கிறவர்களால் எப்படிப்பட்ட இன்னல்களை தலித்மக்கள் அனுபவித்து வருகின்றனர். என்பதை விளக்கும் படமாகவும், தலித் மக்களுக்கு ஒரு துணிச்சலை அசுரன் திரைப்படம் இன்றைக்கு  கொடுத்துள்ளது என்றார்.

கவிஞர் யுகபாரதி  கவிஞர் யுகபாரதி பேசுகையில் சமூகத்தில் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகள திரைப்படம் மூலம் வெளிகொண்டு  வருவது இன்றைக்கு அரிதாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் ஆறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களே ஜாம்பவன்களாக உள்ளனர். இவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அது தான் திரைப்படத்தில் காட்டப்படுகிறது. அசுரன் திரைப்படம் தயாரிப்பாளர் இன்றைக்கு இத்திரைப்படம் 100கோடி வரை வசூலாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பொதுமக்கள்மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள படமாக  அசுரன் விளங்குகிறது. மேலும் பல அசுரன் திரைப்படங்கள் வரவேண்டியுள்ளது என்றார். விழாவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் இராமசாமி நிர்வாகிகள் மூர்த்தி, செயராமன், அரிகிருஷ்ணன்,சரவணன் உட்பட திரளானோர் விழாவில் பங்கேற்றனர்.