புதுக்கோட்டை, ஆக.23 - அகில இந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி மாணவர்கள் ம.சந்தோஷிகா, ம.நிஷாந்த் கிருஷ்ணன், ம.தனுஷ் கிருஷ்ணன் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அம்மன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், அதிகாலையில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு தினசரி பயிற்சிக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த குழந்தைகள் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது உத்ரகாண்ட் மாநிலத்தில் Modern Pentathlon National Championship – 2024 என்ற இந்திய அளவில் நடைபெற்ற டிரையாத்தல் (Swimming, Running & Shooting) போட்டியில் பங்கேற்றனர். இதில் 5 ஆம் வகுப்பு மாணவி ம.சந்தோஷிகா 11-வயதிற்கான டிரையாத்தல் பெண்கள் பிரிவில் மூன்றாமிடமும், டையாத்தலில் மூன்றாமிடமும், 14 வயதிற்குட்பட்ட பிரிவில் ம.நிஷாந்த் கிருஷ்ணன் ஐந்தாமிடமும், 15 வயதிற்குட்பட்ட பிரிவில் ம.தனுஷ் கிருஷ்ணன் ஆறாமிடமும் பெற்று எகிப்து நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்திய அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம் மூர்த்தி, மாணவர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார். இயக்குநர் சுதர்சன், துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.