புதுக்கோட்டை, டிச.14 - ரூ.2 கோடியில் தரம் உயர்த்தப்பட உள்ள கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை தற்பொழுது இயங்கும் இடத்திலேயே தரம் உயர்த்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானதும் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை தரம் உயர்த்துவதற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தார். இதனைத் தொடர்ந்து ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியில் பேருந்து நிறுத்தும் நிழற்குடை, தரைத்தளம், கடைகள், கழிப்பறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து மேற்படி கட்டுமானம் நடைபெற உள்ள இடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை நேரில் பார்வையிட்டு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ராஜாக்கண்ணு, திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மா.தமிழ்ராஜா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம், திமுக நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா கமிட்டி தலைவர் நியூஸ் ராஜேந்திரன், திமுக வர்த்தக அணித் தலைவர் தாமரை பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.