குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களிடம் நேரடியாகவே கேட்ட நீதிபதி கே.எம். ஜோசப்
புதுதில்லி, மே 3 -
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூன் 16-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்ன தாக, தான் இந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கி விடக் கூடாது என்று நினைக் கிறீர்களா.. என்றும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களைப் பார்த்து நேரடியாகவே கே.எம். ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியர் களுக்கு எதிராக வன்முறை தூண்டிவிடப் பட்டது. அப்போது அகமதாபாத் அருகிலுள்ள தாகோடு மாவட்டம் ரன்தீக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரையும், அவரது தாயார் உள்ளிட்ட மேலும் 4 பெண்களையும் 2002 மார்ச் 3 அன்று கும்பல் ஒன்று வல்லு றவுக்கு உள்ளாக்கியது. மேலும், பானுவின் 3 வயது பெண்குழந்தை சலேஹாவை பாறை யில் அடித்துக் கொன்ற அந்தக் கும்பல், மொத்தமாக 7 பேரை கொன்று குவித்தது.
இந்த கொடூரச் சம்பவத்திற்குப்பின், பில்கிஸ் பானு நடத்திய நீண்ட நெடிய சட்டப்போராட்டம் காரணமாக, 2008-ஆம் ஆண்டு, குற்றவாளிகள் 11 பேருக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனிடையே, ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷை லேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் ஓஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் ஓஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய குற்றவாளிகள் 11 பேரையும், 2022 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு குஜராத் பாஜக அரசு சிறையில் இருந்து விடுதலை செய்தது.
கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விடுதலைக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பத்திரிகையாளர் ரேவதி லால், முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் மீரான் சாதா போர்வான்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2022 நவம்பர் 30 அன்று பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் இரண்டு நீதிபதிகள் அடங்கிய தனி அமர்வை அமைத்தார்.
இங்கு கடந்த மார்ச் 27 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “இது உணர்வுப்பூர்வ மான விஷயம். இருப்பினும், சட்டத்துக்கு உட்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்படும்” என்று கூறிய நீதிபதிகள், 11 குற்றவாளிகளின் விடுதலை குறித்த ஆவ ணங்களைத் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால், ஏப்ரல் 18 அன்று வழக்கு விசார ணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசும், குஜராத் அரசும் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் அலட்சியம் காட்டின. “கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வை மறுஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்” என்று வழக்கைத் திசைத்திருப்பும் நடவடிக்கைகளில் இறங்கினர்.
இதனைப் புரிந்துகொண்ட நீதிபதிகளோ, “தண்டனைக் காலத்தில் 11 குற்றவாளி களுக்கும் பரோல் (விடுமுறை) வழங்கப்பட்டி ருக்கிறது. குற்றவாளிகளில் ஒருவருக்கு 1,000 நாட்கள், இன்னொருவருக்கு 1,200 நாட்கள், மற்றொருவருக்கு 1,500 நாட்கள் என பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு கர்ப்பிணிப் பெண் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இதை, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன்கீழ் வரும் கொலைகளுடன் ஒப்பிட முடியாது என்றும், ஆரஞ்சுடன் ஆப்பிளை ஒப்பிட முடியாது என்று எப்படி விளக்கம் அளிக்கிறோமோ, அதேபோல கும்பல் கொலையை ஒற்றைக் கொலையுடனும் ஒப்பிட முடியாது; எனவே, இந்த வழக்கில், குற்றத்தின் தீவிரத்தை மாநில அரசு கருத்தில் கொண்டிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.
மேலும், “இன்று பில்கிஸ் பானு பாதிக்கப்பட்டிருக்கிறார். நாளை வேறு ஒரு பெண் பாதிக்கப்படலாம். அது நீங்க ளாகவோ, நானாகவுமோ கூட இருக்கலாம். ஒன்றிய அரசு ஒப்புதல் தந்துவிட்ட கார ணத்தாலேயே குஜராத் மாநில அரசு மனசாட்சிப்படி நடக்கக் கூடாது என்றெல் லாம் எதுவும் இல்லை. இத்தகைய விவ காரங்களில் இறுதியான உறுதியான நிலைப் பாடு எடுக்கப்பட வேண்டும். எனவே, குஜராத் அரசு இதில் ஒரு முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவு எடுப்போம்” என்றும் காட்ட மாக குறிப்பிட்டனர்.
இதனிடையே மே 2 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கம்போல ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. ஒன்றிய மற்றும் குஜராத் அரசுகளின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானுவைத் தவிர, மற்றவர்கள் தொடர்ந்துள்ள வழக்குகளுக்கு ஆட்சேபணை தெரிவிப்பதாகவும், கூடவே, பானுவின் மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்” என்றும் கேட்டார். இதேபோல விடுதலையான 11 பேரின் வழக்கறிஞர்களும் கூடுதல் அவகாசம் கோரினர்.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், விசாரணையே நடைபெறக் கூடாது என நினைக்கிறீர்களா? என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களைக் கடுமையாகச் சாடினர். குறிப்பாக, “நீதிபதி கே.எம். ஜோசப், “மே 19-க்குப் பின் கோடை விடுமுறை தொடங்குகிறது; ஜூன் 16-ஆம் தேதி நான் ஓய்வு பெறுகிறேன். இந்தச் சூழல், இவ்வாறு அவகாசம் கேட்பதன் மூலம் இந்த வழக்கை நான் விசாரிப்பதையே தடுக்க நினைக்கிறீர்களா?” என்று பகிரங்கமாகவே கேட்டதுடன், “நீதிமன்றத்திற்குள் இத்தகைய போக்கு சரியானது அல்ல.. உங்கள் கடமைகளை மறக்கக் கூடாது” என்றும் விளாசினார். இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை மே 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.